மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் நிலவி வருகின்ற நிலையில் மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக நகர சபையின் தவிசாளர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த தோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது.
நீண்ட காலமாக இந்த நிறுவனம் மனித எச்சங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளில் அருகிலேயே வீசி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், இங்குள்ள இராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைகின்றன.அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மன்னார் பொலிஸார் மற்றும் நகரசபை ஆகியவற்றுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த மனிதநேயமற்ற மற்றும் சட்டவிரோத செயற் பாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தின் அனுமதி பத்திரத்தை ரத்து செய்து, அதை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவிக்கையில், மன்னார் சௌத்பார் பகுதியில் இருந்து பொது மக்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அங்கே மனித பாகங்கள் இறுதி கிரியைக்கு தயார் படுத்தும் இடத்தில் மனித பாகங்களை மேலாலே புதைத்து வைத்து அதை நாய்கள் இழுப்பதும், சுகாதாரக் கேடுமாக இருக்கிறது .
உடனடியாக அந்த இடத்திற்கு நானும் ,மன்னார் நகர சபையின் பொது சுகாதார அதிகாரியும் சென்றிருந்தோம். சென்று பார்த்த பொழுது உண்மையிலேயே புகைப்படங்களை நான் பார்த்தேன்.
உண்மையிலேயே மிகவும் சுகாதாரத்துக்கு கேடான வகையிலே அந்த இடத்தில் அவற்றை புதைத்து வைத்திருக்கிறார்கள். மேலேயே புதைத்து வைத்திருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அந்த இடங்களை உடனடியாக சீல் வைத்து மூடவும் நான் பொது சுகாதார அதிகாரிக்கு கட்டளையிட்டு இருக்கிறேன்.
எனவே இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டும். நான் அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தேன், இறுதி கிரியைக்கு நீங்கள் தயார்படுத்தும் உடல்களின் பாகங்களை மன்னார் பொது மயானத்தில் கொண்டு வந்து, பொது சேமக்காலையில் புதைக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தேன். அந்த சட்டங்களை, அந்த கட்டளைகளை அவர்கள் மீறி இருக்கிறார்கள்.
மன்னார் நகரத்திலே பொது சேமக்காலை க்கு அருகாமையில் எம்பாமிங் (Embalming) செய்யும் ஒரு நிலையத்தை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
வேலை முடிந்த தருவாயில் இருக்கிறது. அந்த வேலை முடிந்தவுடன் நாங்கள் பொதுப் பெறுகை நடைமுறை ஊடாக அதை கொடுத்து அந்த இடத்திலே மாத்திரம் தான் இனி எம்பாமிங் செய்ய வேண்டும். எம்பாமிங் செய்கின்ற உடல்களின் பாகங்கள் மன்னார் பொது சேமக்காலையில் புதைக்கப்பட வேண்டும் என்றார்.


