ஐரோப்பாவில் இன்னும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் (Jet Fuel) இருப்பு இருக்கக்கூடும் என்றும், இதனால் கண்டத்தின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்யப்படும் விமான எரிபொருளின் அளவு 75 சதவீதமாக இருந்தது.
தற்போது அங்கு நிலவும் மோதல் போக்கு மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையிலிருந்து மாற்று வழிகளில் எரிபொருளை இறக்குமதி செய்யாவிட்டால், அடுத்த 6 வாரங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படும் என IEA தெரிவித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபாத்தி பிஹ்ரோல் இது குறித்துக் கூறுகையில், „நாம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம்“ என எச்சரித்துள்ளார்.
இதன் விளைவாக பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்றும், இது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு விமானத் துறை ஆண்டுதோறும் சுமார் 851 பில்லியன் யூரோக்களை வருமானமாக ஈட்டித் தருவதுடன், 14 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.
இவ்வாறானதொரு பின்னிணியில், எரிபொருள் தட்டுப்பாட்டால் எதிர்வரும் கோடைகால விமானப் பயணங்கள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என ஐரோப்பிய விமான நிலையங்களின் சம்மேளனம் (ACI Europe) தெரிவித்துள்ளது.
பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான EasyJet, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை உயர்வால் சுமார் 25 மில்லியன் பவுண்டுகள் கூடுதல் செலவை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக பயணிகளின் டிக்கெட் முன்பதிவுகளும் கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
