சுமார் 10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 60 வயதுடைய இந்தியப் பிரஜை எனவும் அவர் ஒரு புவியியலாளர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உகண்டாவின் கம்பாலா நகரில் இருந்து கட்டாரின் டோஹா நகருக்குச் சென்று, அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம் இன்றைய தினம் காலை 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் கிரீன் சேனல் ஊடாக போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்ற போதே, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இவர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்த இரண்டு சான்றிதழ் கோப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோகிராம் 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
