பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இன்று (22) உள்ளூர் நேரப்படி காலை சுமார் 9 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
டக்லோபன் நகர காவல் அலுவலகம் இந்தத் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டித்ததுடன், “தகவல் கிடைத்தவுடன்” சம்பவ இடத்தைப் பாதுகாக்க காவல்துறை உடனடியாக அங்கு சென்றதாகவும் தெரிவித்தது.
காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக உரிய மருத்துவ வசதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
