மனவுறுதியின் உறைவிடமான டடி/நவம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்…
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் அர்ப்பணித்து போராடிய போராளியான நவம் அவர்கள்,படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான். வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும் தம்பி இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியோரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். எந்தத் தாயானாலும் சொல்லும் கதை தான் . ஆனால்,அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கின்றது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையெனத் முடிவெடுக்கிறான்.
“எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு தளபதி கேணல் கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்ந்தாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் .அவன்தான் டடி.டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலை நாட்டில். தொடர்ந்து போராடியது வன்னிக் களங்களில் ,வன்னியை காதலித்த…. வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில். பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான். விருந்தாளிகளாக வந்தோரால் ஏதிலிகளாகப்பட்டு ஏதுமற்றவர்களாக ஆக்கப்பட்டது தான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை சிறிலங்காஅரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள். அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால் தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஒதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.
நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன். ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பகுதியில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான்.
வெளியீடு :களத்தில்
