உலகளாவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான பேபால், இலங்கையில் தனது முழுமையான செயல்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15) முதல் இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.
நீண்டகாலமாக PayPal சேவைகளுக்காகக் காத்திருந்த இலங்கை பயனர்களுக்கு, குறிப்பாக ஒன்லைன் வணிகர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
இலங்கையிலுள்ள பயனர்கள் இனி PayPal ஊடாக சர்வதேச ரீதியிலான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
இணையத்தளங்கள் வாயிலாக பொருட்களைக் கொள்வனவு செய்யவும், ஏனைய வெளிநாட்டு சேவைகளுக்காகவும் இந்தக் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தலாம்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் மற்றும் சேவைகள் PayPal கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதுடன், குறிப்பாக பல்கலைக்கழகக் கட்டணங்களை செலுத்துவதற்கு இது மிகவும் இலகுவானதாக அமையும்.
இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது, கடன் அல்லது வரவு அட்டை (Credit/Debit Card) இலக்கங்களை இணையத்தளங்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
PayPal ஊடாக கொடுப்பனவு செய்வதற்கு மின்னஞ்சல் (Email) முகவரி மாத்திரமே போதுமானது. இதன் காரணமாக சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள இதுவொரு முக்கிய வாய்ப்பாகும்.
இலங்கையிலுள்ள வங்கியொன்றினால் வழங்கப்பட்ட Debit அல்லது Credit அட்டைகளை PayPal கணக்குடன் இணைப்பதன் மூலம் இந்தக் கொடுப்பனவுகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன் வெளிநாட்டிலுள்ள ஒருவர் மற்றுமொரு PayPal கணக்கிற்கு பணத்தை அனுப்பவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
