சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேற்பார்வையின்றி டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் சிறுவர்கள் சுரண்டப்படுதல், அதற்கு அடிமையாதல் மற்றும் நடத்தை ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்படி, சிறு பிள்ளைகளிடையே மொபைல் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக வலைதள அணுகுமுறையைத் தடை செய்தல் உள்ளிட்ட சாத்தியமான கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், 12 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் தற்போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அதிகரித்து வரும் அபாயங்களுக்குப் பதிலளிக்கவும், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் சரோஜா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
