தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சபை கடிதம் எழுதியுள்ளது.
சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜய் பேசும்போது, பெற்றோர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட சிறுவர்கள் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார். ஒரு சில முறை இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
விஜயின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. அரசியல் காரணங்களுக்காக சிறுவர்களை தூண்டிவிடுவது சட்டவிரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் வந்தன.
இந்நிலையில், தமிழக சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு சபையின் சார்பில், பொலிஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் பிரசாரத்தின்போது ஓட்டு சேகரிப்பதற்காக சிறுவர்களை தூண்டிவிட்டு, பெற்றோரை தவெகவிற்கு ஓட்டுப்போடு வற்புறத்தவைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக சிறுவர்களை பயன்படுத்தியது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை அகற்ற வேண்டும். விஜய் மற்றும் அவரது கட்சியின் பிரசார குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் சபைக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
