88 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. வன்னிக்காடுகளில் எமது தலைவர் பிரபாகரனைத் தேடி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சல்லடை போட்டுக்கொண்டிருந்த காலம்…….. காடுகளில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியபோதெல்லாம், பாரிய உயிரிழப்புக்களைச் சந்தித்த ஆக்கிரமிப்புப் படையினர் பின்னர் தமது முகாம்களில் இருந்தவாறு காட்டுப்பகுதிகளை நோக்கித் தொடர்ச்சியான எறிகணை (ஷெல்) தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்…….. எங்களுடைய முகாம் அமைந்திருந்த அலம்பில் காட்டுப் பகுதியை நோக்கித் தினமும் இடைவிடாமல் எறிகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன. எனவே அந்தப் பகுதியை விட்டு அதற்குச் சமீபமான வேறொரு பகுதியில் எமது முகாமை மாற்று வதற்காக, எம்மில் குறிப்பிட்ட சிலர் மட்டும் அந்த இடத்திற்குப் போய்த் தற்காலிகமுகாம் ஒன்று அமைத்து – நிரந்தர முகாம் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்துக்கு அப்பால் அருவி ஒன்று…. அருவியின் மேற்குப் புறமாய்ப் பெரியவெளி ஒன்று. இப்படிப்பட்ட வெளியை வெட்டை’ என்றும் சொல்லுவதுண்டு. அது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காட்டு முகாம் என்பதால், அப்போதுதான் அங்கே கிணறு ஒன்று தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தோம். அதனால் எமக்குத் தேவையான தண்ணீரை, சுமார் ஒரு மைல் தொலைவில் – வாய்க்காலின் நடுவே வெட்டப்பட்ட ஐந்து அடி ஆழமான கிணற்றிலிருந்தே எடுத்துவரு வோம். பெரும்பாலும் ஆனந்தி அக்கா பாதுகாப்புக் கொடுத்து முன்னே செல்ல, எங்கள் பட்டாளம் தண்ணீரை நிரப்பும் பாத்திரங்களுடன் (Barrel) பின்னே செல்லும். ஒருவர் தோளையும் மற்றவர் தோளையும் பலமாய்த் தடி ஒன்று இணைக்க – தடியின் நடுவில் நீர் நிறைந்த பாத்திரங்களைக் கட்டித் தொங்கவிட்டு இருவர், இருவராய்ச் சுமந்து வருவோம். ஆனந்தி அக்கா …… மன்னார் தந்த மறப்பெண். எம் இதயங்களில் தனக்கென்று ஒரு தனிவிடத்தைப் பதிவு செய்து கொண்டா இனிய தோழி. எப்போது நினைத்தாலும் அந்த நெடிய, உயரத்துக்கேற்ற பருமனுடன் உறுதியான உடல் வாகும் கொண்ட அவளுடைய உருவம் எம்முன் நின்று, எம்மைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கும்… ஆர். பி. ஜி. போன்ற கடினமான ஆயுதங்களைக் கூட லாவகமாய் இயக்குவதில், ஆனந்தி அக்கா கைதேர்ந்தவள். தனது மனவுணர்ச்சிகளை இலேசில் வெளிப்படுத்தாத அந்த வீராங்கனையின் அடி மனதில், எல்லோரிடத்திலும் ஒருவித ஆழமான பாசம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததை, அவளுடைய செய்கைகள் எப்பொழுதும் எமக்கு உணர்த்தும்....